குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவை: புதிய முயற்சியில் எஸ்.இ.டி.சி.
தமிழகத்தின் பத்து மாநகராட்சிகள் உள்பட 12 இடங்களில் குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவையை வழங்கும் வகையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியிருக்கிறது


தமிழகத்தின் பத்து மாநகராட்சிகள் உள்பட 12 இடங்களில் குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவையை வழங்கும் வகையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வி ஸ்பீடுஸ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் 7சி கூரியர் சர்வீசஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்ம் இந்த சேவை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 1256 பேருந்துகளிலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
குறைந்தது 250 கிராம் முதல் 70 கிலோ வரை கூரியரில் பார்சல் அனுப்ப முடியும். குறைந்த கட்டணமாக ரூ. 7 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அஞ்சல் சேவையில் குறைந்த கட்டணமாக ரூ. 7-ம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு 250 கிராமுக்கும் ரூ. 2.50 வீதம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.
பார்சல்களை அனுப்பும் போது குறைந்தபட்ச கட்டணமாக 2.5 கிலோவுக்கு ரூ. 25-ம், இதைத் தொடர்ந்து ஒவ்வொரு 250 கிராமுக்கும் ரூ. 2.5 வீதம் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும். 500 கிராம் பார்சல் அனுப்பினாலும் 2.5 கிலோவுக்கு வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படும்.
பதிவு அலுவலகத்திலிருந்துதான் அனுப்ப முடியும்: வழக்கமாக அலுவலகத்துக்கு வந்தே நேரடியாக அஞ்சல்களையோ, பார்சல்களையோ கூரியர் நிறுவனத்தினர் பெற்றுச் செல்லும் நிலையில், 7சி கூரியர் சேவையில் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பணிமனைகள் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் பதிவு அலுவலகத்திலிருந்துதான் அஞ்ல்கள், பார்சல்களை அனுப்ப முடியும்.
முகவரி சான்று கட்டாயம் : கூரியர் சேவையில் அஞ்சலோ, பார்சலோ அனுப்பும் போது அனுப்புபவரின் முகவரி சான்று கட்டாயம் தேவை. அதே போல பார்சல், அஞ்சல் பெறுபவர்களுக்கும் அவர்கள் வாங்கும் இடத்தில் முகவரி சான்றை கட்டாயம் காண்பித்தாக வேண்டும்.
உடனடி விநியோகம்:
அன்றைய தினத்திலேயே விநியோகம் (சேம்டே டெலிவரி) என்ற இலக்கை கொண்டு சேவையை தொடங்கியிருக்கிறோம். திருச்சியிலிருந்து ஒருவர் சென்னைக்கு அஞ்சலையோ, பார்சலையோ அனுப்பினால் அன்றைய தினத்திலேயே அதை விநியோகம் செய்துவிடுவோம்.
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பகல், இரவு நேரங்களில் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், தேவை இருக்கும் போது உடனடியாக அப்போது பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளின் மூலம் அனுப்பி வைக்க முடியும்.
இதன்மூலம் அன்றைய தினத்திலேயே அனுப்பப்படும் பார்சல் அல்லது அஞ்சலை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார் 7 சி கூரியர் சேவையின் திட்ட மேலாளர் ஜி. ரமேஷ்.
நகைகள், ரொக்கம், கண்ணாடி, வெடிப் பொருள்கள், தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்வதற்கு அனுமதியில்லை. என்ன பொருள் அனுப்புகிறோம் என்பதை பிரித்து காண்பித்த பிறகே அனுப்புவதற்கு அனுமதிக்கப்படும்.
பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் பார்சல், அஞ்சல் அனுப்பி வைப்பதும், எடுக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றார் ரமேஷ்.
விரைவில் மாவட்டந்தோறும் தொடங்கத் திட்டம்: தற்போது சென்னை, திருச்சி உள்பட 10 மாநகராட்சிகள், பெங்களூர் உள்பட 12 இடங்களில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து மாவட்டத் தலைநகரங்களிலும் 7சி கூரியர் சேவையைத் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அப்பணிகள் முடிவுற்ற பின்னர் மாவட்டந்தோறும் இந்த சேவை தொடங்கப்படும் எனவும் கூரியர் சேவையை மேற்கொண்டு வரும் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலம் முழுவதும் பரந்து விரிந்த போக்குவரத்து சேவையை மேற்கொண்டிருப்பதால் கூரியர் சேவையின் மூலம் குறிப்பிட்ட வருவாய் கிடைக்கும். எனவே சேவையைத் தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர் விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...